தேவர் போற்றி

தேவர் போற்றி :




தேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்

தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க

காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த

கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை

வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை

வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்

வாழையடி வாழையென அவரைப் போற்றி

வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை

மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்

பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்

பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்

கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்

கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக

நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்

நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்


உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்

உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்

புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை

புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை

கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி

கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்

எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை

என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ள


வேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்

வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்

போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்

போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்

காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு

கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு

ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்

அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ

தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்

காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று

கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்

சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற

செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி

ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை

அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி.
 
 
நன்றி :நெல்லைக்கண்ணன்


_

No comments:

Post a Comment