பசும்பொன் தேவரின் பொன்மொழிகள்





ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
 
ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். 

தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.


ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக எல்லாரும் இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.


அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.

வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை  ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.



நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.

ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.

 
உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்...? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.

       - பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் 


நன்றி: திரு. துரைராஜ் கண்டியர், தலைவர், பசும்பொன் நுண்கலைக் கழகம், சென்னை.
மூல நூல்: பசும்பொன் நுண்கலைக் கழகம், பசும்பொன் அறக்கட்டளை நிர்வாகிகளின் முகவரி கையேடு 2009 - 2010.

கீழத்தூவல் தேவரின ஐவர் படுகொலை


1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள  கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், கீழத்தூவலை சேர்ந்த தவசியாண்டி தேவர், சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் ஆகியோரை காவல்துறையினர் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற தினத்தை தேவர் சமூகத்தினர், கீழத்தூவலில் ஆண்டு தோறும் செப்டம்பர் பதினான்காம் நாள் வீர வணக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

வரலாற்று பக்கங்களில் மறைக்கமுடியாத உண்மைகள் சில:




தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.

இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட பெரிய காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய, அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள  கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.

கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் "ரே" அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் யென்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ...? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடி சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே...? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் "ரே" , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.

அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன...? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை...? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத சோதனை நடத்திய பின் ரகசியமாய் போலிசாரே எரித்து விட்டனர். இதுதான் இன்றுவரைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலை சம்பவமாகும்.



கீழத்தூவல் படுகொலைக்கு பின்பும் காங்கிரச அரசின் கொலைவெறி

கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை...? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.


காங்கிரஸ் அரசின் வெறித்தனம்

மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்...? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.


தேவரை கைதுசெய்ய தீவிரம் காட்டிய காங்கிரஸ் :


இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா...? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, முத்துராமலிங்க தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன.

இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது.

தேவரை கைது செய்து மகிழ்ந்த காங்கிரஸ்:

தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர். தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.

_

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

-பி.ஏ. கிருஷ்ணன்




“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.
 
புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.


புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.

உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;

“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
 
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
 
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”


மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

கோர்லே கூறுகிறார்:

“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.

“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”

எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
 
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்


அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:



1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London

2. Military Reminiscences - James Welsh 1830 London

3. The Examiner 1813 Collection – Leigh Hunt

4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

நன்றி : இந்த கட்டுரையை வழங்கிய 'காலச்சுவடு' இணையதளத்திற்கும் மற்றும் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் 'பி.ஏ. கிருஷ்ணன்' அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.
 
_