1957 - முதுகுளத்தூர் கலவரம்--3

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.

நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பின்னணியை விளக்குமுன், என் மீது சாட்டியுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவைகளைப் பற்றிய வரையில் என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் போர்டுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வருடம் மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கும் நான் போட்டியிட்டேன். அவ்விரு ஸ்தானங்களுக்கும் மக்கள் பெருவாரியான ஓட்டுக்களால் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கு 39 ஆயிரமும் வாக்குகளும், சட்டசபை ஸ்தானத்திற்கு 23 ஆயிரம் வாக்குகளும் அதிகமாகப் பெற்று நான் ஜெயித்தேன். இந்த இரட்டை வெற்றியின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்தை நான் வைத்துக்கொண்டு, முதுகுளத்தூர் சட்டமன்ற ஸ்தானத்தை நான் ராஜினாமா செய்தேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிமிக்கதொரு எதிர்ப்பாளன். அதிகாரம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் 1946ல் விலகினேன். சமுதாய விடுதலைக்காகவும் சுதந்திர லட்சியத்திற்காகவும் போரிட்டு, பல துன்பங்களுக்கு ஆட்பட்டு தவித்த பலநூறாயிரம் மக்களின் உயிர்க் கொள்கையை, அதிகாரம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கையாளவில்லை. காட்டிக் கொடுக்கவே துணிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அதனால், அக்கட்சியிலிருந்து விலகினேன்.

அதன் பிறகு நடந்த தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியும் எனக்கு மாபெரும் வெற்றியும் கண்டு வருகிறது. எவ்வித ஆதரவையும் பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் தலைமையில் உள்ளவர்கள் உட்பட, சமீபத்தில் இடைத்தேர்தலில் என் ஆதரவு பெற்ற சசிவர்ணத்தேவரை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். இம்மாதிரி, நான் நிறுத்திய அபேட்சகரைத தோற்கடிக்க காங்கிரஸ்காரர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்வதையோ, தமக்குச் சாதகமாகப் பேசுவதையோ எவரும் மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது. அது அவரவர் உரிமை, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தம் கட்சி ஜெயிக்கப் பாடுபடத்தான் செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இகாங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், அரசாங்கத் தரப்பினரும் வாக்காளர்கள பயமுறுத்திப் பேசுவதிலும், மறவர்களுக்கு எதிராக அரிஜனங்களைத் துhண்டி விட்டு, வகுப்பு உணர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள். சசிவர்ணத்தேவர் வெற்றி பெற்றால், பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரும்". என்று எனது ஆதரவாளர்களிடம் பயமுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். அந்த பயமுறத்தலில் உள்நாட்டு மந்திரி பக்தவச்சலத்தின் பேச்சின் மூலம் உச்சிக்கே போய்விட்டது.

முதுகுளத்தூர் தொகுதியில் பல இடங்களில் ஜூன் 25-ஆம் தேதி பக்தவச்சலம் பொதுக் கூட்டங்களில் வாக்காளர்கள் பயந்து, குலை நடுங்கும்படியான முறையில் பேசியுள்ளார். மறவர் அல்லாத மைனாரிட்டி மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும், இதை எல்லாம் அடக்கி ஒடுக்கும் காலம் நெருங்கி விட்டதென்றும் பேசிய திரு. பக்தவச்சலம், சர்க்காரை கிருஷ்ண பரமாத்வாகவும், என்னைச் சிசுபாலனாகவும் வர்ணித்து காலத்துக்காக அமைதியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, காலம் வந்தவுடன், தனது சக்ராயுதத்தால் சிசுபாலனை வதைத்தது மாதிரி, சர்க்காரும் என்னை வதைக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய விபரம் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் நன்கு தெரிந்து இருப்பார்கள். மேலும் அவர் என்னைத் தோற்கடித்து, எனது செல்வாக்கைக் குறைத்துவிடக் காலம் வந்து விட்டதென்றும், என்னைத் தோற்கடிப்பதற்காகப் பெரிய போலீஸ் படையை முழு அளவுக்கும் உபயோகிக்க முடிவு செய்து விட்டதாகவும் சவால் விடுத்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சிலிருந்து அவர் தரப்பினால் விளைந்த நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பொறுப்பாக்கி இருக்கிறார்கள். மந்திரி பக்தவத்சலம் பேசிய பேச்சுக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு, அவர் பேசியது உண்மைதானா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 'இந்து' பத்திரிகை நிருபரிடம் மந்திரியின் பேச்சுக்குறிப்பு ஒன்று கேட்டேன். 'இந்து' நிருபரின் செய்தி இந்து பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அதன் நகல் ஒன்றை இத்துடன் போர்டின் பார்வைக்காக இணைத்து இருக்கிறேன்.

மந்திரியின் பேச்சிலிருந்து என் மீதும், நான் பிறந்த ஜாதியின் மீதும் வேண்டுமென்றே எவ்வளவு மோசமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதையும் ஜாதிவெறி எவ்வளவு பயங்கரமாகத் தூண்டிவிடப் பட்டிருக்கிறது? என்பதையும் குறிப்பாக, போலீஸ் பொறுப்பில் உள்ள உள்நாட்டு மந்திரியிடமிருந்த அந்த ஜாதித்துவேஷம் எவ்வளவு பக்குவமாய் அனல்கட்டி இருக்கிறது? என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.மந்திரியின் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு வந்திருப்பதாய் உணர்ந்து, ஜுன் 27ல் திருச்சுழியில் நடந்த கூட்டத்தில் அதற்கு நான் பதிலளித்தேன். எனது திருச்சுழிப் பேச்சின் சுருக்கம் ஜுன் 28ம் தேதி தினமணி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. அந்த நகலையும் இணைத்திருக்கிறேன். "எதிர்தரப்பினரின் கோபமூட்டும் பேச்சுக்களில் ஆத்திரப்பட்டு, எவரும் எந்தச் செயல்களிலும், இறங்கிவிடவேண்டாம்" எவர் எதை எந்த முறையில் எந்த அளவுக்குப் பேசினாலும், மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆத்திரம் வேண்டாம்" என்று எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துத் திருச்சுழியில் பேசினேன். ஜுலை 1ல் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் மறுபடியும் வாக்களிக்க வந்தனர். முந்திய மாதிரியே எனது அரசியல் கட்சிக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். 24 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சசிவர்ணத் தேவருக்கு வெற்றியைக் கொடுத்தார்கள். முந்திய பொதுத் தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட, இந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் அதிகம், மூன்று தேர்தலிலும் கிடைத்த ஓட்டு விபரப் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன். தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி வெளிவந்தது. இதன்பிறகு, தேர்தலுக்கு முன் திரு.பக்தவத்சலம் விதைத்த பயமுறுத்தல்கள் தளிர்த்து காய்த்துப் பழமாக ஆரம்பித்து விட்டது. அதன் மூலம் உருவாகிக் கொண்டிருந்த பயங்கரத்தை உணர்ந்தார்.

12-7-1957ல் கமுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மீண்டுமொரு முறை அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு, "எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது" என்று கரங்குவித்து வேண்டிக்கொண்டேன். ஜூலை மாதத்தில் வெளிப்பகுதியினரின் தூண்டுதல் மீதும், போலிஸ் பாதுகாப்போடும் அரிஜனங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம்பவகள் அத்தனையும் எனது ஆதராவாளர்களை அலைகழித்து, தொல்லை கொடுத்தவைகள் ஆகும். அந்த நிலைமை முற்றிக் கொண்டு போவதைக் கண்ட எனது சகா சகிவர்ணத்தேவர், இராமநாதபுரம் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசரைச் சந்தித்து, அப்பகுதியில் உள்ள எல்லாக் கட்சி தலைவர்களையும் கூட்டி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுத்து, சாதி பிளவு உணர்ச்சிளை அகற்றி, ஐக்கியப்படுத்தி, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான வகையில் ஒரு திட்டம் தயாரிக்கும்படி கோரி இருந்தார். நிலைமை கட்டுங்ககடங்காமல் வளருவதை அதிகாரிகளிடம் அறிவித்த பிறகும், நெருக்கடி நிலைமை கொஞ்சமும் தளராமல், அதன் போக்கில் ஓங்கி, மோசமான முடிவை எட்டிக் கொண்டிருந்திருக்கிறது, நிலைமையின் மோசத்தை விவரித்து எனது ஆதரவாளர்கள் அனுப்பிய மனுக்கள் ஏராளம். அமைதிக்கு, அதிகாரத் தலைப்பில் இருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனது ஆதரவாளர்கள் தம்மை நோக்கிச் சூழ்ந்து வரும் நெருக்கடிகள், நிலைமைகளை விவரித்து, அதிகாரிகளுக்கு அவ்வப்போது அனுப்பிய மனுக்கள் தேதி வாரியாக இதோடு சேர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 2-ல் சசிவர்ணத் தேவரும் மேலும் எனது தரப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஐவரும், ஜில்லா கலெக்டரைச் சந்தித்து "நெருக்கடி நிலைமை முற்றுகிறது. நாடார் வகுப்பைச் சேர்ந்த வியாபாரிகள், போலிஸ் அதிகாரிகள் சிலரின் ஜாடையான ஆதரவோடு, ஏழை அரிஜனங்களுக்குப் பணம் கொடுத்து, எனது ஆதரவாளர்களைத் தாக்கும்படி துhண்டிவிட்டு வருகிறார்கள்" என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு அந்த ஆறு எம்.ஏ. க்களும் கமுதி இன்ஸ்பெக்டர், முதுளத்தூர், கடலாடி, நரிக்குடி, கமுதி இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு குற்றம் சாட்டி, அவர்களை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு விரைவில் மாற்றும்படி கலெக்டரை வேண்டியிருக்கிறnர்கள். இதே விவரங்கள் டி.எஸ்.பி. முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. தூண்டி விட்டுக் கலகத்தை மூட்டும் நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் வளருகிறது என்று, இவ்வளவு தூரம் எடுத்து விளக்கியும் கூட, செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேரடியாக, முறையிடப்படும் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கலெக்டர் எல்லாத் தரப்புத் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் நிலைமையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான அருமையான காலமெல்லாம் வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் முதிர்ந்து கொண்டே போய் விட்டது.

செப்டம்பர் 9 ல் நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாளில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொண்டேன். சமாதானமாகவும் அமைதியாகவும் எல்லா இன மக்களும் இருக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் கையொப்பமிட்டேன். சமாதான மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திரு இமானுவேல் என்பவர் 11 ம் தேதி தாக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் தொகுதிக்கு 15 மைல் அப்பாலும், என் சொந்த கிராமமான பசும்பொன்னுக்கு 30 மைல் தள்ளியும் உள்ள பரமக்குடியில் அன்று நடந்த சம்பத்திற்கு நான் பொறுப்பாளியாக்கப் பட்டிருக்கிறேன், என்பதைக் குறிப்பாக போர்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அன்றைய தினத்தில் நான் அங்கு போனதுமில்லை. 13 ம் தேதி எனது முதுகுளத்தூர் தொகுதிக்கு அப்பால், உள்ள பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த, அருங்குளத்தில் மறவர்களுக்கும் அரிஜனங்களுக்குமிடையே கடுமையான கலகம் நடந்திருக்கிறது. 14ம் தேதி கீழத்தூவல் கிராமத்தில் மிருகத்தனமான ரீதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து, ஐந்து மறவர்கள் துடிககத் துடிக்கக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி தான் முதன்முதலாய் முதுகுளத்தூர் பகுதிக்கு கலவரம் வருகிறது. நாடார்கள் தூண்டுதலாலும், போலிசாரின் உதவியாலும் அரிஜனங்கள் அணிவகுத்துப் போய் நான்கு மறவர்களைக் கொன்றிருக்கிறார்கள். மறவர்கள் திருப்பித் தாக்கி, இரண்டு அரிஜனங்களைக் கொன்று, அந்த தாக்குதலை விரட்டி அடித்திருக்கிறார்கள். 17 ம் தேதி போலிசாரின் கொலைப்படலம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீரந்தைக்கு இரண்டாவது தடவையாக வந்து, எனது ஆதரவாளர்களான ஒரு அரிஜன் உட்பட ஏழு பேர்களை கொன்று விட்டனர். பகிரங்கமான இவ்வளவு குரூரமான முறையில் தூண்டிவிடப்பட்ட சம்பவங்கள், பல இடங்களிலும் நடந்து கொண்டு வருகையில், ஒரு தரப்பில் மட்டும் அடக்க நிலை சாத்தியமா? காங்கிரஸ் சர்க்காரும் நாடார் வியாபாரிகளும் சேர்ந்து மறவர்களுக்கு விரோதமான உணர்ச்சிளைக் கிளறி விடும் தங்கள் வேலையைச் சரிவரச் செய்து, அச்செயல் குரூரம் அடைந்து, தமது உயிரையே பறிக்க வந்த நிலையில், சில பகுதி மறவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க முடியாமல், திருப்பி தாக்கியது தவிர்க்கக் கூடியதல்ல.

இந்தக் குழப்ப நிலையில் சமாதானக்குழு ஒன்று உதயமாயிற்று. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த திரு. சா. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி இராமநாதபுரம் சேதுபதி, தமிழரசுக் கழகத்தை சேர்ந்த ம.பொ. சிவஞானம் ஆகியோர். இக்குழுவினர் செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து, அன்று பிற்பகல் என்னைச் சந்தித்தனர்.சமாதானக் குழுவிற்கு எனது முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், சமாதானத்தை நிலைக்கப் பண்ணுவதில் நான் எல்லோரையும் விட அதிக அக்கறையாக இயங்குகிறேன் என்றும் அக்குழுவினரிடம் வாக்களித்தேன். ஆரம்பத்தில் சமாதானத்திற்கு வாக்களித்து, ஒத்துழைப்பதாய் வாக்களித்த காங்கிரஸ் தலைவர்கள், பிறகு அவ்வக்குறுதியை நழுவ விட்டார்கள்.

திரு. ம.பொ. சிவஞானம் கிராமணியார் எனது சமாதான ஆர்வத்தையும், அதற்காக நான் ஒத்துழைக்க உடன்பட்ட உண்மை பூர்வமான என் மனப்பாங்கையும் விவரித்து விடுத்த அறிக்கையின் பிரதியை இத்துடன் இணைத்திருகிறன். அது செப்டம்பர் 25 ம் தேதி இந்து பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 19 ம் தேதி முதுல் 25 ம்தேதி வரை கீழத்தூவல் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் மீது ஸ்ரீவெங்கடஸ்வரன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை, அரசாங்கம் தன்னை அச்சம்பவங்களில் சம்பந்தப்படாத மாதிரி காட்டி, தன்னை மறைத்துக் கொள்வதந்காகச் செய்து கொண்ட ஏற்பாடேயன்றி, உண்மை நிலையை விளங்கிக் கொண்டு
, நியாயம் வழங்குவதற்காக அல்ல என்று கண்டதும் அவ்விசாரணையை அன்று மட்டும் மறுக்கவில்லை. இன்றும் கூடத்தான் மறுக்கிறேன். எவ்வித மேலாதிக்கம் இல்லாத, சுதந்திரமான நீதி விசாரணை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் நடத்தப்பட்ட வேண்டும் என்பதிலும், அதைத் தவிர வேறு வகையான அரசாங்க விசாரணை எதுவும் பயன் தராது என்பதிலும் எனது உறுதி அன்று மட்டுமல்ல, இன்றும் அதே தான்.

அதிகாரத்தில் இருக்கிற சர்க்கார், குறிப்பாக, முதல் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும் இந்தச் சவாலில் உட்பட்டிருப்பதால், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மேலாதிக்கத்திற்கு அடங்கிய எந்த விசாரணையும் நீதியைப் பிரதிபலிக்காது என்பதே எனது நோக்கம் அன்றும் இன்றும் இத்தகைய அவசர விசாரணை கூட உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பளித்து விசாரணை விபரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் மூலம், போலிசாரின் கொடுமைகள் எவ்வளவு தூரம் மேலோங்கி இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாட்சி சொல்ல வந்தவர்கள் போலிசாரின் பயங்கரத்திற்கு எவ்வளவு தூரம் ஆட்பட்டு இருக்கிறார்கள்? என்பதையும் விசாரணை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமயத்திலெல்லாம் மேலும் கலகநிலை வளராமல் தடுத்து, சமாதானத்தை நிலை நாட்டுவதில், அதர கட்சிப் பிரதிநிதிகளோடு, நான் முழு முயற்சியில் ஈடுபட்டு இருந்தேன். எங்களது இடைவிடாத முயற்சியின் பயனாகத்தான் அமைதி சாத்தியம் ஆயிற்று.

கலெக்டரும் மதுரை டி.எஸ்.பி.யும் இந்த அமைதி நிலையைப் பற்றி (செப்-28 வரை) பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளனர்.அதே நாள் மாலை, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் தொடக்க விழாக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தொடக்க விழாவில் நான் கிட்ட தட்ட இரண்டரை மணி நேரம் பேசினேன். எனது அந்தச் சொற்பொழிவில், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் படிப்படியான முன்னேற்றத்தை விபரமாக எடுத்துக் கூறினேன். பழைய காங்கிரஸ்காரர்கள் அதை விட்டு விலகியதற்கான காரணத்தையும், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உதயமான விபரத்தையும் ஒரு புதுக் கட்சி தோன்றித் தீரவேண்டிய அவசியத்தையும் விளக்கினேன்.

என்னுடைய நீண்ட நேரப் பேச்சில் முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக அரைமணி நேரப் பேச்சில் சமாதானத்தையும் சகல இன மக்களின் அமைதியையும் தான் அழுத்தமாக நான் வலியுறுத்தினேன். அதோடு, சர்க்காரின் ஜாதி துவேஷ வளர்ப்புக் கொள்கையையும் எல்லா இன மக்களிடமும் நான் பெற்றுள்ள மரியாதையையும், ஆதரவையும் ஜாதி துவேஷத்தின் மூலம் அழித்துவிடக் கையாண்டு வரும் வழிமுறைகளையும் பச்சை பச்சையாக ஒன்று விடாமல், ஆதாரத்தோடு விளக்கினேன். ஆனால் நான் சச்சரவை விரும்பவில்லை. சமாதானத்தையும் அமைதியையுமே விரும்புகிறேன். அதற்காகவே இரவு பகல் ஓயாமல் பாடுபடுகிறேன். துன்புறுத்தப்பப்பட்ட மக்கள், தங்கள் இன்னல்களைக் களைந்து கொள்ளச் சட்டத்தில் வசதி இருக்கிறது. எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல என்பதே எனது குறி. பலாத்கார செயல்களே கூடாது என்பதில் எனக்குள்ள அழுத்தமான அக்கறையை பலதடவை நான் மெய்ப்படுத்தி இருக்கிறேன். அன்றைய கூட்டத்திலும் வற்புறுத்திப் பேசினேன். அப்பேச்சின் சுருக்கம் செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. அந்த நகல் பிரதிகளும் இத்தோடு இணைத்திருக்கிறேன். பல ஆயிரம் மக்களுக்கு முன், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டைத் திறந்து வைத்து, நீண்ட பெரும் பிரசங்கத்தைச் செய்து முடித்த அரை மணி நேரத்தில், என்னிடம் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டேன். சென்னைக்குக் கூட்டி வந்தார்கள். மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.

நடப்புகளின் பின்னணி இதுவாக இருக்கையில், என்னைச் சிறைப்படுத்த ஏதேனும் நியாய சம்மதம் இருக்க முடியுமா?சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளுத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது.

மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.

ஸ்ரீபக்தவச்சலம் அவ்வளவு பயங்கரமாகப் பேசியும், காங்கிரஸ் தலைவர்கள் இழிவான பிரச்சாரத்தைச் செய்தும், சர்க்காரின் மூலம் பல சகிக்கவியலாத தொல்லைகள் கொடுத்தும், என் தொகுதி மக்களை ஜனநாயக வழியிலிருந்து பிரிக்கவோ, என்னிடமும், நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடமிருந்து அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் உதற வைக்கவோ முடியவில்லை என்பது வெளிப்படை. ஆகவே தான் ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் நெருக்கடி நிலை என் தொகுதியில் உருவானதை அறிந்து சசிவர்ணத் தேவரும் பிறரும் அடுத்தடுத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அம்முறையீடு அத்தனையும் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குரூரமாகக் கொடுமைப்படுத்தியும் கூட, அவர்களின் அபிமானத்தையும் உறுதியையும் கலைக்க முடியவில்லை. முடியாது எனக் கண்ட அரசாங்கம், என்னைப் பிடித்தாலாவது அம்மக்களின் மனதைத் திகில்படுத்தி நடுநடுங்க வைக்கலாம் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி, என்னைச் சிறைப்படுத்தியிருக்கிறதே தவிர, என்னைச் சிறைப்படுத்துவதற்கான உண்மைக் காரணங்களோ, நியாயமோ கொஞ்சமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னைத் தடுப்புக்காவல் சட்டத்தில் சிக்க வைத்திருப்பதற்குக் காரணம், எனக்குள்ள அரசியல் செல்வாக்கை ஒழிக்க, அதிகாரத்தில் இருக்கிற கட்சி, செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான். அதே சதியின் விளைவுதான் முதுகுளத்தூரில் நடைபெற்ற வேதனைமிக்க சம்பவங்கள். இதைத் தவிர நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கு பரிபாலிப்பிற்கும் என்னைச் சிறைப்படுத்தி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலாவது பாராவுக்கு எனது விளக்கம் அகில இந்திய ரீதியில் பலாத்காரப் போராட்டம் நடத்தப் போவதாக நான் பயமுறுத்திப் பேசினேன் என்று கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லை. ஆனால், நம்முடைய சர்க்காரின் காமன் வெல்த் உறவு தொடர்பு குறித்த வெளிநாட்டுக் கொள்கையைக் காரசாரமாக விமர்சித்திருக்கிறேன். காமன்வெல்த் உறவை விட்டு ஆறு மாதங்களுக்குள் விலகாவிடில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக நான் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பிரகடனித்தேன் என்று சர்க்கார் குற்றஞ்சாட்டுகிறது.

அதாவது நான் மதுரையில் அவ்வாறு பேசியதாக அரசாங்கம் குறிப்பிடுகிற தேதி 1956 மே மாதம் 12ம் தேதி. முதுகுளத்தூர் சம்பவம் நடந்தது 1957 செப்டம்பரில். இதற்கிடையில் உள்ள இடைவெளி 16 மாதங்கள்.16 மாதங்களுக்க முன் நான் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 16 மாதங்கள் சென்றபின் நடந்த மற்றொரு சம்பவத்தோடு பிணைத்து, அதுதான் கைதாவதற்குக் காரணம் ஆனது எப்படி சாத்தியமாயிற்று? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடவடிக்கையில் இருக்கும் ஒரு அரசியல் ஊழியன் நான். இந்த முறையில் சாதாரணமாக நான் மாதம் சுமார் 10 கூட்டங்கள் வரை சொற்பொழிவாற்றி வருகின்றேன். தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்குப் பத்துக்கூட்டம் வரை பேசி இருக்கிறேன்.இந்தப் பதினாறு மாத கால அவகாசத்தில், நான் பேசிய கூட்டங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால், நான் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் சொல்வது ஐந்து கூட்டங்களைத்தான். இதிலிருந்தே சர்க்காரின் குற்றச்சாட்டுக்களில் உள்ள பலவீனம் தெரிகிறது.

மேலும், நான் மதுரையில் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் கூறுகிற 1956 மே 12க்கும், முதுகுளத்தூர் சம்பவம் நடந்த 1957 செப்டம்பருக்கும் இடையில் எவ்விதச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது இந்த இடத்துக்கு அதிக முக்கியம். 2வது பாராவுக்கு விளக்கம்இது முழுக்க முழுக்கப் பொய். பணக்கார நாடார் வியாபாரிகளின் முறைக்கொவ்வாத வியாபாரப் போக்கையும், சாதாரண இன மக்களையும் விட்டுத் தனித்தியங்கும் பழக்கத்தையும் மட்டும்தான் கண்டித்துப் பேசினேன். அதோடு நாடார்களில் அத்தகைய செயல்களை மாற்ற, மற்ற பொதுமக்கள் முனைய வேண்டும் என்றும் பேசினேன். அரிஜனங்கள் வகுப்புணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டு, பொறாமைப்பட்டோரின் கருவியாகி விட வேண்டாம் என்று, அரிஜனங்களையும், சர்க்காரின் தயவையும், உதவியையும் பெற்று வகுப்புக் கலவரத்துக்கு அடியிடும் பணக்கார நாடார்களையும் எச்சரித்தேன். என்னுடைய இந்தப் பேச்சு, மறவர்களால் தாக்கப்படுவதற்கு அரிஜனங்களை இலக்காகிற்று என்று சொல்வது அறிவீனமாகும்.

1957 மே, ஜுன் மாதங்களில் வகுப்புக் கலவரம் நடந்ததாக எவரும் புகார் பண்ணவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. ஆகவே, 1957 ஏப்ரல் 17ல் நான் பேசியதன் மூலம் அரிஜனங்கள், மறவர்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்று கூறுவதில் பொருளே இல்லை. எனது கைதுக்கு அந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் காட்டப்படும் அறிக்கை சுத்தச் சூன்யமாகவே காண்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட பொய்மை நிறைந்ததாகும்.

3வது பாராவுக்கு விளக்கம் 1957ல் ஜுன் 14ல் அபிராமத்தில், கலவரத்திற்குத் தூண்டப்படும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு விடாமல், அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்தேன். போலீசைப் பயமுறுத்தி பேசியதாகக் கூறுவது சிறிதும் உண்மைக்கு ஒட்டாது.

4வது பாராவுக்கு விளக்கம் 1957 ஜுலை 10ல் திருப்புவனம் புதூரில் பேசினேன். ஜுன் 27ல் திருச்சுழியில் பேசிய மாதிரிதான் திருப்புவனம் புதூரில் பேசினேன். திரு பக்தவத்சலம் பேசியது போன்று காங்கிரஸ்காரர்கள் கலவரத்தை உண்டாக்கும் தோரணையில் பேசிவரும் பேச்சுக்களை வெளிப்படுத்தி விமர்சனமும் செய்தேன். முதுகுளத்தூரில் மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன் என்று கூறப்பட்டிருப்பது பெருத்த அபத்தமாகும்; அதிவேகமானதும்கூட. சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாகப் பேச வந்திருப்பவர் திரு. இமானுவேல். ஆனால், முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டபூர்வமான மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. வேறொருவர் இருக்கிறார். அதனால், இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு, இத்தொகுதி எம்.எல்.ஏ. தான் அதிகாரபூர்வமானவர் என்று தான் நான் சொன்னேன். இதைத் தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சமமாகப் பேசுவதால், என் கௌரவம் குறைந்து விட்டதென்று நான் கூறவேயில்லை. எனது தொகுதியில் திரு. பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்க வைத்த நான், சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்கு முன் பேசியதைக் கேவலமாகக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமுமாகும்.

அதோடு, மற்றொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ஜாதி அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி, நானும் எனது சகாவான முதுகுளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினரும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்படவேயில்லை. திரு இமானுவேல் தாக்கப்பட்டதற்கு என் மீது பொறுப்பைச் சுமத்தும் நோக்கத்தோடு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீவெங்கடேஸ்வரன் விசாரணையின் போதும், நான் இனத் துவேஷத்தைத் தூண்டி விட்டேன் என்றோ, திரு இமானுவேல் மீது பகையுணர்ச்சிப் பட்டிருந்ததாகவோ, எந்தச் சாட்சியும் கூறவில்லை. இந்த நிலைமையில் அருவருக்கத்தக்கத் தக்க பல குற்றச்சாட்டுகள் என் மீது தவறாகச் சாட்டியிருக்கிறார்கள். இதெல்லாம், போர்டாரின் கருத்து என்மீது தவறாகப் படரட்டும் என்பதற்காகவே. துரதிருஷ்டவசமாக அச்சம்பவம் குறித்துக்காட்டப்பட்டுள்ள எல்லாமுமே உண்மைக்குப் புறம்பானவை. குற்றச்சாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மாதிரி, சமாதான மாநாடு முடிந்ததும் இமானுவேல் பற்றி நான் கூறவே இல்லை; அப்படிக் கூறவும் மாட்டேன். அம்மாதிரி நினைப்பதற்கே இழிவான அச்செயலை நான் புரியத் திட்டமிட்டிருந்தால், அதைப் பலபேர் முன்னிலையில் பறையடிப்பதற்கு நான் முட்டாள் அல்ல. இமானுவேல் மரணத்திற்கும், இக்கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இக்கலவரச் சம்பவங்களோடு சேராத வேறு பல காரணங்கள் அதைச் சுற்றி நிற்கின்றன. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி இதற்குமேல் அதிகம் விவரிக்காமல் விடுகிறேன்.

செப்டம்பர் 16ல் வடக்கம்பட்டி கூட்டத்தில் நான் பேசியதாகக் குறிப்பிடப்பதும் மோசமான பொய். காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்காலும், போலீசாரைத் தங்கள் கெட்ட எண்ணத்திற்குப் பயன்படுத்துவதாலும், அவர்களது நோக்கம் ஈடேறாது என்று எச்சரித்தேனே தவிர, நிலைமையை அடக்க சர்க்கார் பலாத்கார நடவடிக்கையில் இறங்கினால், அதே செயல் மூலம் பதிலளிக்கப்படும் என்று நான் குறிப்பிடவேயில்லை. மேலும் இந்த நாட்டில் தருமத்தை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆயுதம் ஏந்தும்படியோ, உள்நாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்கும்படியோ நான் பேசவேயில்லை. அதற்கு மாறாக, வகுப்பு ஐக்கியத்தையும் சமாதான வாழ்வையும் வற்புறுத்தினேன். அதோடு கடுமையான அடக்கு முறையை நடத்தியும் கூட, பிரிட்டிஷ் சர்க்கார் இப்பகுதி மக்களைப் பயமுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை, காங்கிரஸ் சர்க்காருக்கு நினைவுறுத்தி, அத்தகைய மக்களை அனாவசியமான அடக்குமுறையின் மூலம் அதிரச் செய்துவிட காங்கிரஸ் முயன்றால், பலன், பிரிட்டிஷ் சர்க்கார் பெற்றதாகத் தான் இருக்கமுடியும் என்று எச்சரிக்கவும் செய்தேன். இந்த அளவுக்கு கூட அரசியல் ரீதியில் பேசுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதா?

வடக்கம்பட்டியில் செப்டம்பர் 16ல் நான் பேசிய பிறகு, கொலை, கொள்ளை, தீ வைப்புகள் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அச்சம்பவங்களை முன்னர் நான் குறிப்பிட்ட பகுதியில், இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் செயலால் விளைந்தவை என்று தான் கூறுவேன். அந்த அதிகாரிகளை அந்த இடத்தில் இருந்த மாற்ற வேண்டுமென்று ஆரம்பத்திலேயே எனது தரப்பிலே மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால், அந்தச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எவரும் காரணமாயிருக்க முடியாது. பொதுவாக, இச்சம்பவங்களின் ஆரம்பமும் முடிவும் ஏழு நாட்கள் தான் செப்டம்பர் 14லிருந்து 20க்குள் நிலைமை ஓய்ந்து விட்டது. இதை கலெக்டரும் டி.எஸ்.பியுமே ஒப்புக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் செப்டம்பர் 28ம் தேதி, அதாவது நிலைமை ஓய்ந்து சமாதானம் சாத்தியமான எட்டு நாட்கள் கழித்து, சிறைப்படுத்தப்படுகின்றேன். 20ம் தேதி நடந்த சம்பவங்களுக்காக 28ம் தேதி நான் சிறைப்பட எப்படி நியாய சம்மதம்? கிடைத்ததோ தெரியவில்லை. "கலவரம் ஓய்ந்து எட்டு நாட்களான பிறகு, சமாதானம் வந்து விட்டது" என்று அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டபிறகு, என்னிடம் தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டினால், அதில் நியாயச் சார்பு ஒரு ஓரத்திலாவது ஒட்டியிருக்கமுடியுமா? ஒரு போதும் முடியாது.

தமிழ்நாடு பத்திரிகையின் பிரதிநிதியோடு நான் பேசுகையில், சர்க்காரோடு சண்டையிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருப்பதற்கு அடிப்படையே இல்லை. நான் சொல்லியதே வேறு. அந்தச் செய்தியில் தேதி குறிக்கப்படாது போயினும் 24ம் தேதி நான் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதியுடன் பேசும்போது குறிப்பிட்ட விபரம் மேற்படி பத்திரிகையில் 25ம் தேதி வெளிவந்திருக்கிறது. அதன் நகலை இத்தோடு இணைத்துள்ளேன். அதுவே, அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்.எவ்விதத் தொடர்புமற்ற முறையில் எங்கோ இருக்கிற எனது சொந்தக் குராமத்தில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று, எனது வீட்டுப் பணியாளர்களைக் கைது செய்து இருப்பதன் மூலம், அரசாங்கம் என்னைக் கோபப்படுத்த முனைகிறது என்ற விபரத்தை அந்தப் பத்திரிக்கை நறுக்கின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீவெங்கடேஸ்வரனின் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, அரிஜனங்களை அச்சுறுத்துவதற்காக நான் கட்டிட வாயிலில் காத்திருக்கவில்லை. அவ்விசாரணையில் கலந்துகொள்ள நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சசிவர்ணத் தேவர் உட்பட என் நண்பர்கள், அதில் கலந்து கொள்ள விரும்பினார்கள். 19ம் தேதி நான் அவர்களுடன் மோட்டார் காரில் பரமக்குடிக்குப் போனேன். விசாரணை நடந்த இடத்திற்கு என் நண்பர்கள் சென்றார்கள். நான் அரை மணி நேரம் மற்றொரு நண்பரின் வருகைக்காக அங்கு காரில் காத்திருந்தேன். 21ம் தேதி ஐந்தே நிமிடம் அங்கு காரில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தேன். 22,23,24 தேதிகளில் நான் அந்த இடத்திற்கே போகவில்லை. 23ம் தேதி நான் பரமக்குடியில் இருக்கவில்லை. மகாளய அமாவாசைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சொற்பொழிவும் ஆற்றினேன்.கடைசியாகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே, பொய்யானவை என்பது, அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கும் சர்க்காருக்குமே நன்கு தெரியுமென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். செப்டம்பர் 10ல் கலெக்டர் கூட்டிய சமாதான மாநாட்டில் தயாரிக்கப்பட்ட சமாதான வேண்டுகோளில் நான் கையெழுத்துப் போட்டு இருக்கிறேன். டில்லிக்குச் செல்லும் முன், வகுப்புணர்ச்சிக்கு இடம் கொடுத்து சமாதானத்தைக் குலைத்து விட வேண்டாமென்று வேண்டியிருக்கிறேன். டில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்து சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்து, அதற்காகப் பாடுபட்டும் வந்திருக்கிறேன். செப்டம்பர் 21ல் மதுரை வந்த சமாதானக் குழுவினர்க்கு பூரண ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ்காரர்கள் முதலில் உடன்பட்டு, பிறகு உதறி விட்டனர்.

நான் கைதாவதற்கு சற்று முன்பு மதுரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய நான், "பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்" என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டேன். நான் விரும்புவது சமாதானமே என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியுமா? சமாதானத்தை விரும்பும் ஒருவன் இதைவிட மேலான உண்மையான வேண்டுகோளை விடுக்க முடியுமா? ஒரு சமாதான வேண்டுகோளை இதைவிட உறுதியான வார்த்தைகளால் கோர்த்து விடுக்கத்தான் முடியுமா? சமாதானத்திற்காக முன்நிற்கும் ஒருவன் தனது எண்ணத்தை இதைவிட வேறு முறையில் எப்படித்தான் வெளிப்படுத்துவது? காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 28ல் தொடங்கி வைத்து நான் பேசிய பேச்சு முழுவதும் டேப்-ரிக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முதுகுளத்தூர் சம்பவம் பற்றி நான் பேசிய பகுதியை மட்டும் திரும்ப வைத்துக்கேட்டால், சமாதானத்தில் எனக்குள்ள உறுதி திட்டவட்டமாகப் புலப்படும். அந்த டேப்-ரிக்கார்டைத் திரும்ப வைத்துக் கேட்கும்படி போர்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்னைச் சிறைப்படுத்தியது சரிதான் என்று போர்டார் நம்புவதற்காக, கௌரவமற்ற முறையிலும், நியாயமற்ற முறையிலும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் அத்தனையும். என் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குற்றம் சாட்டியவர்களைக் குறுக்கு விசாரணை செய்து, எனது நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பும் எனக்குத் தரவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவேன். அத்தகைய வாய்ப்பு இல்லாத சிரமத்தில் நான் இருப்பதைப் போர்டார் புரிந்துகொள்ளலாம்.

சமாதானமாக இருக்கும்படி நான் வேண்டுகோளே விடுக்கவில்லை என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இது எவ்வளவு மோசமான, உண்மையை மூடி முத்திரை வைத்த பொய்யான குற்றச்சாட்டு என்பதை நான் விளக்கத் தேவை இல்லை. ஆனால், இது ஒன்றை வைத்தே என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஒருதலைத் தன்மையை அளவிட்டு விடலாம். மற்றும் எனது பேச்சுக்களைக் காரணம் காட்டி சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சரியான ஆதாரத்தைச் சர்க்காரும் கொடுக்கவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பமும் எனக்குத் தரப்படவில்லை. எனவே, நான் சமாதானத்திற்காக உண்மையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய் பொய் பொய் பொய் என்ற ஒரு தரம் அல்ல; நூறு தரம் சொல்கிறேன். சொல்லுவதற்கான ஆதாரங்களை மேலே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். நான் விவரித்துள்ள அவ்வளவும் ஆதாரபூர்வமானவை. அவைகளுக்குரிய முக்கியத்துவம் அளிக்கும்படி போர்டாரை வேண்டுகிறேன்.

நான் பின்னாலிருந்து கொண்டு தேவர்களைப் பலவந்த நடவடிக்கைகளுக்குத் தூண்டி விட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது எளிது. ஆனால் அதை நிருபிப்பது கடினம். காட்டுத்தனமான இக்குற்றச்சாட்டில், ஒரு பகுதியாவது உண்மையென்று நிரூபிக்க, மிகச்சிறயதொரு ஆதாரத்தையாவது எடுத்துக்காட்டும்படி அரசாங்கத்தை அறைகூவுகின்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விடுத்துள்ள சமாதானக் கோரிக்கைகளும், எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை நியாயத்தின் முன்னே நெருங்க விடா. எனவே, என்னைச் சிறைப்படுத்தியிருப்பதற்குச் சரியான காரணம் கொஞ்சமும் இல்லை. நான் எனது சுதந்திரத்தை, மேலும் வகுப்புக் கலவரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிப்பதற்கும் பயன்படுத்துவேன் என்று கூறப்படுவதில் பொருள் இல்லை; அதற்கான ஆதாரங்களும் காட்டப்படவில்லை. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் சர்க்கார் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளை மூடி மறைத்துக் கொள்ளவும், சர்க்கார் புரியும் மோசமான அரசியலை எதிர்ப்பவர்களில் நான் முக்கியமானவனாக இயங்கி வருவதால் என்னை அலைக்கழிக்கவும் தான் சர்க்கார் என்னை இந்தச் சட்டத்தால் வளைத்திருக்கிறது. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் கலக்கத்தைத் தூண்டிவிட்டது; அதன் மூலம் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டது ஆகிய குற்றங்களுக்கு சர்க்காரும் குறிப்பாக முதன் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும்தான் பொறுப்பு என்று நிச்சயமாக உறுதியாகக் குற்றம் சாட்டுகிறேன். சர்க்காரும் குறிப்பாக முதல் மந்திரியும் உள் நாட்டு மந்திரியும் இந்தக் குரூரமான சம்பவங்களை உண்டாக்கியது எனது அரசியல் செல்வாக்கை அழிக்கவே என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் போலீஸ் புரிந்த அக்கிரமச் செயல்களுக்கும் நீதிபதி விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.

பொது மக்களும், பிரபலம் வாய்ந்த ஆங்கிலம் தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகளும் குறிப்பாக இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் போன்ற பத்திரிகைகள் அரசாங்கக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதி இருக்கின்றன. இவ்வகையில் அரசாங்கம் புரியும் செயல்களையும் கொள்கைகளையும் பலமாகக் கண்டிப்பதில் நான் மிக முக்கியமாக இருப்பதால்தான், அரசாங்கம் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறதேயன்றி, ஒழுங்கை நிலைநாட்டவோ, நாட்டுப் பாதுகாப்பிற்கோ அல்ல. தமது நோக்கம் போல் எதையும் முரட்டுத்தனமாகச் செய்வதற்கு இடைஞ்சல் படுத்தும் வகையில், நாடெங்கும் எதிரொலி செய்யும் எனது கண்டனக் குரலைக் கேட்காமல் செய்ய சர்க்கார் கொண்ட ஏற்பாடுதான் எனது சிறைவாசம். இதோடு, சர்க்கார், முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்குச் செய்த அக்கிரமங்களையும், ஒழுங்கீனங்களையும் வெளியாருக்கும், நியாயத்திற்கும் இலேசாகக் காட்டித் தன்னைத் தப்புவித்துக் கொள்ளத்தான், நிலைமை கட்டுக்கடங்கி அமைதி நிலவுகையில் அரசாங்கம் என் மீது சிறைவாச உத்திரவைச் செலுத்தியதற்கு மற்றொரு காரணம். முதுகுளத்தூர் சம்பவங்களுக்கு என்னையே பொறுப்பாக்கிக் காட்டிவிடலாம் என்ற கெட்ட நோக்கில், சர்க்கார் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, என்மீது சாட்டியுள்ளவை அத்தனையும் நியாயத்திற்கு விரோதமானவை என்று போர்டாருக்கு அறிவித்துக்கொள்கிறேன்.

என்னை நேரடியாக விசாரிக்கும்படியும், 28.9.1957ல் நான் மதுரையில் பேசிய பேச்சின் டேப்-ரிக்கார்டைத் திரும்ப போர்டுக்கு முன் வைத்துக்காட்ட வாய்ப்பளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் என்னைச் சாராதவை. நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல. ஆகவே, என்னைச் சிறைப்படுத்தி வைப்பதற்குரிய ஆதாரங்கள் போதவில்லை என்று அறிக்கை விடும்படி அட்வைசரி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்". என்று தேவர் தனது பதிலை முடித்தார். தேவர் கொடுத்த பதிலுக்கு எந்தவிதப் பதிலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை.
_

No comments:

Post a Comment