புதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

புதிய  சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.
தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளன.
கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் ஆய்வாளரும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார் .

தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிரத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாவது ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.
இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பதுபோல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார். 




...