கங்கைகொண்டசோழபுரம் - மாளிகை அகழ்வாராய்ச்சி ......

மாளிகைமேடு திசைகாட்டிப் பலகை

கங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்
படித்திருக்கலாம்.

கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் தலைநகராக விளங்கியது.இந்தியா,இலங்கை,மலேசியா(கடாரம்), நக்கவாரம்(நிக்கோபார்),கம்போடியா உள்ளிட்ட பகுதிகள் இந்த ஊரிலிருந்து ஆட்சி செய்த அரசர்களுக்குக் கட்டுண்டு கிடந்தது.

பாண்டியப் பேரரசின் எழுச்சியால் வீழ்ச்சியுற்ற சோழப் பேரரசு கால ஓட்டத்தில் இல்லாமல் போனது.மாளிகைகள் மண்மேடாயின.கங்கைகொண்டசோழபுரம் கோயில் மட்டும் சிதைவுகளுடன் எஞ்சி நிற்கின்றது.(பிச்சாவரம் பகுதியில் அரச குடும்பம் சார்ந்த மக்கள் வாழ்வதாக அறிஞர்கள் நம்புகின்றனர்.)

இந்த நிலையில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற ம.கோ.இரா அவர்களின் ஆட்சியில்(1980அளவில்) கங்கைகொண்ட சோழபுரம்,மாளிகைமேடு அகழாய்வு வேகம் பெற்றது. இராசேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கங்கைகொண்டசோழபுரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கருத்தரங்குகள்,மேடைநிகழ்வுகள் நடந்ததால் மக்களிடம் மிகச்சிறந்த வரலாற்று விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு எனச் சென்னையிலிருந்து பேருந்து இயக்கப் பெற்றது. அகழாய்வு வழியக மாளிகைமேடு,கங்கைகொண்டசோழபுரத்தின் சிறப்பு வெளியுலகிற்குத் தெரியவந்தது.ஆனால் அகழாய்வுப்பணி இடையில் நின்றுவிட்டது.பாதுகாக்கப்படவேண்டிய அகழாய்வுக் குழிகள் மழைநீர் தேங்கி எருமைமாடுகள் விழுந்து புரளும் இடமாகிவிட்டன.

சிலைகள் மழையிலும் வெயிலிலும் கவனிப்பாரற்றுச் சிதைந்து வருகின்றன.உலக நாடுகள் அகழாய்வுக்கு எந்த அளவு முதன்மை வழங்குகின்றன என்பதைப் படித்த,பார்த்த என் உள்ளம் அண்மையில் மாளிகைமேட்டைக் கண்ட பொழுது வாடி வருந்தியது.தமிழக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கப்படாமல் உள்ளதை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்க கீழ்வரும் சில படங்களை உங்களுக்கு வழங்குகிறேன்.

அகழாய்வுப் பகுதிக்குச் செல்லும் வழி
நீர் நிரம்பிய அகழாய்வுக்குழிகள்

அகழாய்வுச் சுவரும் தண்ணீரும்
மடுபோல் காட்சிதரும் ஆய்வுக்குழிகள்
தண்ணீரில் முகம் பார்க்கும் சுவர்கள்
சிதைந்த காப்புச்சுவர்
அகழாய்வுக்குழி வேறொரு தோற்றம்
கற்சிலைகள் காப்பகம்
ஆலமர்செல்வன்
தலை இல்லா அழகிய சிலை
சிதைந்த சிலை

தலையில்லாத தேவி சிலை
 
 
 
நன்றி: முனைவர் மு.இளங்கோவன்





....
 
 

1 comment:

  1. தற்போது பிச்சாவரம் பகுதியில் வாழும் அரச குடும்ப மக்கள் மற்றும் அவர்கள் இனம் பற்றி விளக்கம் தாருங்கள்

    ReplyDelete